சேவாக் சதமெடுப்பதைத் தடுக்க சூரஜ் ரந்திவ் நோ-பால் வீசியது போல் இன்னொரு சர்ச்சை நிகழ்வு!
ஒருமுறை சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கை அணியின் சூரஜ் ரந்திவ், இந்திய அதிரடி பேட்ஸ்மென் சேவாக் சதம் எடுக்கக் கூடாது என்பதற்காக நோ-பால் வீசியது போல் உள்ளூர் 50 ஓவர் போட்டி ஒன்றில் மீண்டும் பேட்ஸ்மென் சதமெடுப்பதைத் தடுக்க வேண்டுமென்றே வைடு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேவாக் எப்படி 2010-ல் நடந்த போட்டியில் 99 ரன்களில் முடிந்தாரோ இந்தப் போட்டியில் லீவர்ட்ஐலண்ட்ஸ்பவுலரஒருவர் கெண்ட் அணியின் பேட்ஸ்மென் ஜாக் கிராலி 98 ரன்களில் இருந்த போது சதம் எடுப்பதைத் தடுக்க 2 வைடுகளை வீசினார் இது சர்ச்சையாகியுள்ளது.
மே.இ.தீவுகளில் உள்ள நார்த்சவுண்டில் லீவர்ட் ஐலண்ட்ஸ் அணிக்கும் கெண்ட் அணிக்கும் 50 ஓவர் போட்டி செவ்வாயன்று நடைபெற்றது. லீவர்ட் ஐலண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்து 183 ரன்களையே எடுத்தது.
வெற்றி பெற 184 ரன்கள் தேவை என்ற நிலையில் கெண்ட் அணி களமிறங்கி 180/1 என்று அபாரமாகத் திகழ்ந்தது இந்த அணியின் ஜாக் கிராலி 98 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜாக் கிராலி தனது முதல் லிஸ்ட் ஏ சதம் எடுக்க 2 ரன்களே தேவை அப்போது லீவர்ட் ஐலண்ட் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷீனோ பிரிட்ஜ் பந்து வீச வந்தார் ஆனால் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே 2 பந்துகளை வீசினார்.
3வது பந்தும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனதுதான் ஆனால் க்ராலி மட்டையை நீட்டி ஒரு ரன் எடுத்து 99 ரன்களுக்கு வந்தார். எதிர்முனை வீரர் டிக்சன், க்ராலி சதம் எடுக்க வேண்டும் என்பதற்காக பிரிட்ஜின் அந்த ஓவரில் மீதமிருந்த பந்துகளில் ரன் எடுக்காமல் ஆட முயன்றார் ஆனால் கடைசி பந்தை மிட்விக்கெட்டில் தட்டி விட்டார், க்ராலி தன் சதம் பற்றியும் கவலைப்படாமல் 1 ரன் ஓட அழைத்தார், ஆனால் பேட்டிங் முனையில் இருந்த டிக்சன் வர மறுத்தார்.
ஆனால் இதுவும் பயனளிக்கவில்லை காரணம், லீவர்ட் பீல்டர் அந்தப் பந்தை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார், கெண்ட் வென்றது க்ராலி 99 ரன்களில் முடிந்தார், தனது முதல் லிஸ்ட் ஏ சதமெடுக்க முடியாமல் தடுக்கப்பட்டார் க்ரால இதனையடுத்து லீவர்ட் ஐலண்ட் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2010-ம் ஆண்டு இலங்கையில் இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் சூரஜ் ரந்திவ் சேவாக் 99 ரன்களில் இருந்த போது இந்தியா வெற்றி ரன்னை எடுக்க நோபாலை வீசினார், சேவாக் சிக்ஸ் அடித்து சதத்தைக் கொண்டாடினார், ஆனால் பவுலர் முதலிலேயே நோ-பால் வீசியதால் அந்த ஒரு ரன் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு சேவாக் 99 ரன்களில் தேங்கினார். இதனால் சூரஜ் ரந்திவ் மீதும் அவ்வாறு அவரை வீச அறிவுறுத்தியதாகக் கூறப்பட்ட தில்ஷன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment